சாமி சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சாமி ஐயப்பா
இருமுடி கட்டி விரதம் இருந்து
சரணம் சொல்லி சாமி எண்ணி
பெருவழிப் பாதை திருமொழி பாடி
வருகிறோம் தேடி ஒருமுனை கூடி.
பலமுடி கட்டி இருமுடி ஏற்றி
நலமுடன் பலப்பல ஆண்டுகள் ஓடி
சேமம் குருசாமி செல்லத் துரைசாமி
சிரமங்கள் விலக்கி சேர்ந்துணை பழகி
களைப்புகள் நீங்க கலகலப்பாகி
மலைக்காமல் ஏற்றம் வழி நடத்திவாரார்
படவீட்டம்மன் அருளினைப் பெற்று
திடமுடன் சாமிகள் கடமைகள் கற்று
உணவுக்கு ஓருமுடி சாமிக்கு மறுமுடி
இருமுடி கட்டி வழி நடத்த வருவீர்.
பொய்யறு பாங்காய் நெய்நிறை தேங்காய்
நொய்யறு அரிசி பூஜைப் பொருட்கள்
முன்முடி பின்முடி இருமுடி கட்டி
உன்வழி தொடர்கிறோம் சாமி ஐயப்பா.
சாமி சாமி சாமான்யரும் சாமி
சமத்துவம் பழகும் சமரசம் சாமி
உயர்வு தாழ்வு வேற்றுமை இல்லை
பயிலும் சமத்துவம் பேதங்கள் இல்லை
ஒருகுலம் ஓருநிறை ஒற்றுமைப் பயிற்சி
திருமுறை பழக்கும் தெய்வீக முயற்சி.
சாமி என்றால் சகோதரம் சாமி
காமிக்க ஒன்றாம் சபரிமலை சாமி
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment