Wednesday, 3 December 2025

கந்தா கந்தா கந்தய்யா

காவடிப் பாட்டு.

கந்தா கந்தா கந்தய்யா!
காவடி ஆடும் கந்தய்யா!
வந்தோம் வந்தோம் கந்தய்யா--உன்
சன்னதி தேடி கந்தய்யா"
வேலா வேலா வேலய்யா!
வினைதீர் வடிவேல் வேலய்யா!.
வேண்டி வேண்டி வேலய்யா,-உனை
வேண்டி வந்தோம் வேலய்யா!

கடம்பா கடம்பா கார்த்திகேயா!
காத்தருள் வாயே கார்த்திகேயா!
நடந்தோம் நடந்தோம் கார்த்திகேயா--நீ
நல்லருள் தருகக் கார்த்திகேயா!
முருகா முருகா முருகய்யா!.
வருவாய் வருவாய் முருகய்யா!.
வரவாய் நீயருள் முருகய்யா-வரம்
தருவாய் திருவாய் முருகய்யா!

பாலா பாலா சிவபாலா"
பழம்நீ பழனி சிவபாலா!
மயில்மேல் வருவாய் சிவபாலா--வள்ளி
மனம்மகிழ் அழகா சிவபாலா!
பாணி பாணி தண்டபாணி!
பழனி நின்ற தண்டபாணி!
ஔவைத் தமிழ் நீ தண்டபாணி--தமிழ்
செவ்வை மொழிநீ தண்டபாணி!

குன்றம் குன்றம் குமராநீ!
கொண்டும் கொண்டும் குமராநீ!
நின்றும் நின்றும் குமராநீ--வரம்
தந்தும் வளம்செய் குமராநீ.!
வள்ளி தெய்வானை கணவாளா!
நல்லதே அருளும் திருவாளா!
நாளும் நல்லருள் கொடையாளா--மணக்
கோலம் கொண்ட மணவாளா!

அம்மை அப்பன் சண்முகனே
அறுகுணத் தும்சம் அறுமுகனே
சரவணப் பொய்கை சரவணனே--அருள்
தருவதன் அம்சம் திருமுகனே
தீய சக்தித் தீர்ப்பவனே
நேய பக்தி ஈர்ப்பவனே
கந்த சஷ்டிக் கவசனே--காக்கச்
செந்தூர் வெற்றித் திருமகனே

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

No comments:

Post a Comment