Friday, 7 March 2014

உள்ளம் என்பது கோவில்.

உள்ளம் என்பது கோவில்

உள்ளம் என்பது கோவில்---அதில்
உள்ளது நீதான் சாமி.
உன்னைத் தொலைத்துத் தேடு-பாவக்
கண்களை மறந்து கூடு.

இல்லை என்பதும் இருக்கின்றது.--அங்கே.
இருப்பதும் நீயே தெரிகின்றது.
இருண்ட உண்மை ஒளிர்கின்றது.—நெஞ்சம்
மருண்ட மாயை தெளிகின்றது.

கலையின் அம்சம் கோவிலது.--ஆசை
அலையும் நெஞ்சின் கூடலது.
தொலையும் பொய்மை ஆவலங்கு---தொலைந்து
தொடரும் மெய்மை தேடலங்கு.


கலையாய் உன்னை இரசித்திடத்தான்.--மெய்மை
நிலையாய் உள்ளம் வசித்திடத்தான்.
அமைதி சொல்லும் சிலைகளிலே--உந்தன்
அனுபவம் செதுக்கி படிக்கவைத்தான்.
 
சத்தியம் வாழும் இத்தரை-காவல்
சட்டமும் மன்றமும் தேவையா?
அறமே ஞானம் கல்வியாம்-ஆனவப்
புறமும் தீய்ந்த செல்வமாம்.

கொ.பெ.பி.அய்யா.





Tuesday, 4 March 2014

நாத்திகம் ஆத்திகம்.

புலனாகப் பொருளென்ன?

பாடட்டுமா பாடட்டுமா பாட்டு ஒண்ணு பாடட்டுமா
தேடுகிற மனிதனுக்கு தேடி ஒண்ணு பாடட்டுமா
பாடட்டுமா பாடட்டுமா பாட்டு ஒண்ணு பாடட்டுமா
தேடுகிற மனிதனுக்கு தேடி ஒண்ணு பாடட்டுமா (பாடட்டுமா)

ஆத்தீகம் நாத்தீகம் அதுகூறும் பொருள் என்ன?
காவீயம் கருப்பீயம் கருத்திலது அறிவென்ன?
இருக்கென்றும் இல்லையென்றும் இயம்புவதன் விடையென்ன?
பொறுப்புடனே ஆராய்ந்தால் புலனாகாப் புதிரென்ன?

ஒன்றிலொன்று மற்றொனறு ஆனாலது  மறுமலர்ச்சி.
நன்றில்நன்று ஏற்பதிலே தானதுவும் பெறும்வளர்ச்சி.
பேதம்வாதம் செய்வதிலே ஆகுவதும் தெளிவுணர்ச்சி.
சேதம்நீக்கி செம்மையென சீரானால் அழகுணர்ச்சி .

அடிமைத்தனம் நீக்குவதும் உரிமைநலம் காப்பதுவும். 
அதுகூறும் நாத்திகம் ஆனதொரு புதுமார்க்கம்.
ஆழ்வார்கள் நாயன்மார்கள் அப்படித்தான் பெரியாரும்
ஆய்ந்துபாரதி வள்ளலார் அவ்ர்போலே இவர்மொழியும்.

பொய்யுரைகள் புறஞ்செய்வோம் மெய்யின்வழி மேற்கொள்வோம்.
உய்யும்வழி தமிழ்மரபில் உளம்கொண்டு வாழ்ந்துகொள்வோம்.
செய்யுரைகள் சீரறிந்து சிறக்கமேலும் ஏற்றுக்கொள்வோம்..
ஐயமின்றி அவரவரின் அறிந்தவழி ஆற்றிக்கொள்வோம்.

மூலமென்று ஒன்றுண்டு ஞாலமதில் தோற்றமுண்டு
காலமதன் தொடர்வினையில் கோலங்கள் மாற்றமுண்டு.
பாலமாய் ஒன்றுக்கொன்று பாதைகளும் சேர்வதுண்டு.
ஆழமாய் ஆராய்ந்தால் ஆகிநிற்கும் புள்ளியொன்று.

கவஞர்.கொ.பெ.பிச்சையா.