Thursday, 23 October 2025

முருகன் திருமுகம்

செம்மான் திருடன்.

செம்மான் மகளைத் திருடிய திருடன்
பெம்மான் புகழைப் பாடி--முருகா
உன்னடி தொழ என்னடி தொலைந் தேன்
முன்னடி எண்ணிக் கிடந்தேன்...

சும்மா இருந் துன்னை நினைக்கவும்
சொல்லற மறந்து சுயமும்-- துறந்தும்
எண்ணம் முழுதும் உனையே போற்றி
திண்ணம் நீயெனத் தொழுதேன்.

முருகுன் திருமுகம் அழகுன் அறுமுகம்
உறுவினை ஒழிக்கும் இறையே--உனது
அறுபடை வீடு பெரும்படை யெடுக்கும்
தருணங்களே எதிர்வினை தாமே..

அருண கிரிக்கு அருளிய முருகா
கருணைக் கடலே கடம்பா--உனது
திருவடி சரணம் பெறுவருள் பெறவே
உறுபொருள் பேருபுகழ் நீயே!

தமிழென்ற சொல்லே அழகே அமுதே
கமழும் சந்தனம் சவ்வாதே--குளிர்
பன்னீர் திரவியம் மருக் கொழுந்தே
நன்னீர் நீராட்டு நாயகனே!

கூர்முன வேல்வினை யார் தாங்கும் 
நேர்வினை எதிரப் போர்வினை-- யாரோ!
யார்வினை கொள்வார் யாரவர் யாரோ
ஊழ்வினை அதுவே ஆகும்.

சூரனை வதைத்த சூரசம் காரா
போரினை முடித்த ஓராளா--வானவர்
தேவர் துயர்த் தீர்த்தவனே செந்தூரா
சேவற் கொடியுடை சிவபாலா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



Monday, 13 October 2025

ஏழையின் சிரிப்பில் இறைவன்

உள்ளம் ஒரு கோவில்.

திருப்பதி மலையப்பா.
திருவடி துணையப்பா.
இருப்பது நிலையப்பா,--நீ
ஏழையென் மனதப்பா.

உண்டியல் நிறைத்திட்டேன்
உன்னருள் நிரைந்திட்டேன்.
உண்டியும் கொடுத்திட்டேன்--என்
உளம் உன்னில் வைத்திட்டேன்.

அன்னமும் தானமும்
ஆயிரம் செய்திட்டேன்.
எண்ணம் மறந்திட்டேன்--என்றும்
உன்னையே நினைந்திட்டேன்.

தேரது இழுத்திட்டேன்
தெருவெல்லாம் பூவிட்டேன்.
ஊர் வாழ வேண்டிட்டேன்.--சொந்த
உறவுன்னைக் கொணடிட்டேன்.

பட்டுனக்குக் கட்டிட்டேன்.
பொட்டுனக்குத் தொட்டிட்டேன்.
பாட்டுன்னைப் பாடிட்டேன்-- நெஞ்சில்
ஏற்றுன்னைக் கூடிட்டேன்.

ஏழைக்கு உணவிட்டேன்.
வாழ்வுக்கு வழியிட்டேன்.
வறுமைக்கு முடிவிட்டேன்--ஏழை
சிரிப்பினில் உனைக் கண்டேன்.

ஊரெல்லாம் கூட்டிட்டேன்.
ஊர்கோலம் செய்திட்டேன்.
உளக்கோவில் கூரையிட்டேன்--உள்ளம்
நீ வாழ சீரிட்டேன்.

கோவிலும் கட்டிட்டேன்.
கோபுரமும் உயர்த்திட்டேன்.
பாட்டாளிக்குப் பாடு தந்தேன்--கொடும்
பசியாற்றி உன்னைக் கண்டேன்.

மலையேறி வந்திட்டேன்.
இறையுனைத் தேடிட்டேன்.
இறைஞ்சி பாடி அழைத்திட்டேன்--இருப்பு
இதயத்துள் கண்டிட்டேன்.

கொ.பெ.பிச்சை யா.














நான் யார்?

நான் யார்?

நான் யாரென என்னைத் தேடுகிறேன்
ஏன் பிறப்பென நானேப் பாடுகிறேன்
உண்டும் உறங்கத் தான் தானோ!
கொண்டதும் என்னக் கடன் தானோ!

இறைவா உன்னைக் கேட்டேனா?
இப்புவி படைக்கச் சொன்னேனா?
ன்னை யாரென நீ காட்டு
என்னக் கடனென நீ சூட்டு.

நாயையும் நீதான் படைத்தாயோ!
நானும் அப்படிப் பிறந்தேனோ!
ஏன்தான் என்னை அனுப்பி வைத்தாய்.?
வீண்தான் விளையா விதைதானோ!

எங்கெங்கோ ஏனோ அலைகிறேன்
இறைவனை நானோ தொழுகிறேன்.!
இன்னும் என்னைத் தேடுகிறேன்.
இறைவா ஏனிந்த இரகசியமோ!

சாதனை படைத்த எல்லோரும்
சரித்திரம்  நின்று வாழ்கிறார்
இறைவாநீ என்னை ஏன் படைத்தாய்.?
என்னை என்ன செய்ய வைத்தாய்?

இறைவன் போட்ட கணக் கிருக்கும்.
எல்லோ ருக்கும் எழுத்தி ருக்கும்.
போட்ட கணக்கைத் தீர்த்து வைப்பான்
ஆட்டம் அதன்படி ஆட்டி வைப்பான்.

வள்ளுவன் குறளில் வாழ்கிறான் 
சொல்லும் பொருள்களில் ஆள்கிறான்.
நானும் எங்கோ ஒளிந்துள்ளேன்
ஏனோ என்னை மறந்தாயோ!

பாரதியை மகா கவிஞர் என்றாய்..
காமராசரை கர்ம வீர ரென்றாய்.
வ. உ. சியைச் செம்மல் என்றாய்.
என்னை என்னென்று நீ நேர்ந்தாய்.


கவிஞர்.கொ.பெ.பிச்சையா.








.











மணிகண்டன் (ஐயப்ப சாமி)

மணிகண்ட சாமி ஐயப்பன்.

கழுத்தில் மணிமாலை,
மணிகண்ட சாமிக்கு.
அழகிய திருமுகம்,
ஐயப்பன் சாமிக்கு.
ஆணுக்கும் ஆணுக்கும்,
அவதாரம் ஐயப்பன்.
அரிகர புதல்வனாக,
தவக்கோலம் ஐயப்பன்.
அவன் வரலாறு படிபாபோம் நாமே
அவன் அருளதனை பெறுவோம் நாமே
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

குழந்தை வேண்டி வருந்தியப் பந்தளன்,
அழுதிடும் குழந்தை  அரவம் கேட்டான்..
அருகிய அரசன் அள்ளி முகர்ந்தான். ஆனந்தம் பெருகி ஆசை முத்திட்டான்..
துள்ளிக் கொண்டாடி வீடு விரைந்தான்.
வெள்ளித் தங்கம் அள்ளிக் குவித்தான்.
அரண்மனை முழுக்க விழா எடுத்தான.
இருகரமள்ளி ஏழையர்குக் கொடுத்தான்


இரண் டாவது மனைவி பந்தள ராணி
வேண்டா வெறுப்பா கண்டாள் கோணி 
தன்குல வாரிசுத் தடங்கல் நினைந்தாள்
வன்ம வஞ்சனை மந்திரிக் கலந்தாள்.

வாராத் தலைவலி வந்ததோ!
வந்ததாக நடித்தாள்.வஞ்சகி.
பெறாத மகனான பிள்ளையை,
பலியிட முடித்தாள்.வஞ்சனை..
புலிப்பால் கேட்டொரு கதையை, தொடுத்தாள்.பாதகி சண்டாளி.
தாய்போல் பாசாங்கு செய்தாளே!
நோய்போல் கண்ணீர் பெய்தாலே..

எல்லாம் அறிவான் ஐயனோ!
இறைமகன் அவனோ.மெய்யனே!
ஏதும் வினவாமல் புறப்பட்டான்.
சாதுவாக மணிகண்டன் ஏகினான்.
கானகம் புகுந்தான் அரிகர புத்திரன்.
கண்டான் அரக்கியை எதிரே வர 
தேவர்கள் துயரை அறிந்தவ னாக
தூர்த்திடத் துணிந்தான்.அரிகரனே!

மணிகண்டன் மேலே அரக்கியோ
மகிசவள் பாய்ந்தாள்.செருக்கியே
வந்ததன் காரியம் முடித்திடவே
வதம் செய்து முடித்தான்.ஐயனே.
தேவர்கள் மகிழ்ந்து கொண்டாடி
தேவ ராட்டம் கூடிக் களித்தனர்.
தேவர்கள் தாமே புலிகளாகினர்.
புலிப்பால் கரந்தும் தாமே தந்தனர்

தேவர்கள் தலைவன் தேவேந்திரன் வந்து பணிந்து உள்ளம் நிறைந்தான்.
புலிப்பால் கொண்டு தந்தது கனிந்தான்.
புலியாகத் தானே ஐயனைச் சுமந்தார்.
அரண்மனை வரையும் சவ்வாரியாக
அவருடன் சூழப் புலிகள் சேனை
புலியிடை சவ்வாரி ஐயன் தானை.
புன்னகை செய்து பூரித்தான் மணியன்.

தாயா நடித்து நோயெனத் துடித்தவள்.
வாயில் கண்டு வாயடைத்து நின்றாள்.
புலிப்பால் கண்டு சலிப்பால் வெந்தாள்.
தன்தவ றுணர்ந்து தாளடி பணிந்தாள்.
அவதாரக் காரியம் ஆக்கி முடித்திட்டான்.
வானுலகு ஏகவும் வார்த்தை வந்தது.
சபரிமலைக் காடு தவக்கோல மேடு
கோவில் கட்ட ஆணை யிட்டுமே!
ஏவினான் அம்பால் குறியிட்டான் இடமே!

குறித்த இடத்திலே  பொறித்த விதமே
வடித்த கோவிலே சபரிமலைக் காடே!
அழகான இயற்கை அற்புதக் காட்சி
ஐயப்பன் அமர்வில் அவனது மாட்சி.
நலந்தேடு வர்க்கு வலக்கரம் காட்டுவான்
வளந்தரு சாமி குலக்காவல் ஐயப்பன்.
மலைப் பாதை நடக்க நோய்நொடி தீரும்
களைப்பதும் குறைய கஷ்டம் நீறும்.

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

கவிஞர். கொ. பெ. பிச்சையா.
.