செம்மான் மகளைத் திருடிய திருடன்
பெம்மான் புகழைப் பாடி--முருகா
உன்னடி தொழ என்னடி தொலைந் தேன்
முன்னடி எண்ணிக் கிடந்தேன்...
சும்மா இருந் துன்னை நினைக்கவும்
சொல்லற மறந்து சுயமும்-- துறந்தும்
எண்ணம் முழுதும் உனையே போற்றி
திண்ணம் நீயெனத் தொழுதேன்.
முருகுன் திருமுகம் அழகுன் அறுமுகம்
உறுவினை ஒழிக்கும் இறையே--உனது
அறுபடை வீடு பெரும்படை யெடுக்கும்
தருணங்களே எதிர்வினை தாமே..
அருண கிரிக்கு அருளிய முருகா
கருணைக் கடலே கடம்பா--உனது
திருவடி சரணம் பெறுவருள் பெறவே
உறுபொருள் பேருபுகழ் நீயே!
தமிழென்ற சொல்லே அழகே அமுதே
கமழும் சந்தனம் சவ்வாதே--குளிர்
பன்னீர் திரவியம் மருக் கொழுந்தே
நன்னீர் நீராட்டு நாயகனே!
கூர்முன வேல்வினை யார் தாங்கும்
நேர்வினை எதிரப் போர்வினை-- யாரோ!
யார்வினை கொள்வார் யாரவர் யாரோ
ஊழ்வினை அதுவே ஆகும்.
சூரனை வதைத்த சூரசம் காரா
போரினை முடித்த ஓராளா--வானவர்
தேவர் துயர்த் தீர்த்தவனே செந்தூரா
சேவற் கொடியுடை சிவபாலா.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment