Thursday, 23 October 2025

முருகன் திருமுகம்

செம்மான் திருடன்.

செம்மான் மகளைத் திருடிய திருடன்
பெம்மான் புகழைப் பாடி--முருகா
உன்னடி தொழ என்னடி தொலைந் தேன்
முன்னடி எண்ணிக் கிடந்தேன்...

சும்மா இருந் துன்னை நினைக்கவும்
சொல்லற மறந்து சுயமும்-- துறந்தும்
எண்ணம் முழுதும் உனையே போற்றி
திண்ணம் நீயெனத் தொழுதேன்.

முருகுன் திருமுகம் அழகுன் அறுமுகம்
உறுவினை ஒழிக்கும் இறையே--உனது
அறுபடை வீடு பெரும்படை யெடுக்கும்
தருணங்களே எதிர்வினை தாமே..

அருண கிரிக்கு அருளிய முருகா
கருணைக் கடலே கடம்பா--உனது
திருவடி சரணம் பெறுவருள் பெறவே
உறுபொருள் பேருபுகழ் நீயே!

தமிழென்ற சொல்லே அழகே அமுதே
கமழும் சந்தனம் சவ்வாதே--குளிர்
பன்னீர் திரவியம் மருக் கொழுந்தே
நன்னீர் நீராட்டு நாயகனே!

கூர்முன வேல்வினை யார் தாங்கும் 
நேர்வினை எதிரப் போர்வினை-- யாரோ!
யார்வினை கொள்வார் யாரவர் யாரோ
ஊழ்வினை அதுவே ஆகும்.

சூரனை வதைத்த சூரசம் காரா
போரினை முடித்த ஓராளா--வானவர்
தேவர் துயர்த் தீர்த்தவனே செந்தூரா
சேவற் கொடியுடை சிவபாலா.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.



No comments:

Post a Comment