Thursday, 9 January 2025

முன்னை முதல்வன்.

முன்னை முதல்வன்

முன்னை முதலோனே! 
மூஞ்சூர் வாகனனே!
அன்னைப் போல் பெண்தேடி
தண்ணீர்க் குளம் காப்போனே!
உன்னையும் தீண்ட வந்து 
ஊழ்வினை சனி தோற்றான்.
என்னை அஞ்சி சனி ஓட
இன்னை வா  கணபதியே!

வேழ முகத்தோனே
வேலவன் மூத்தோனே!
ஞால முதல்வனே 
ஞானப் பழத்தோனே!
வாழும் உயிர்க் கெல்லாம் வாழ்வளிக்கும் வள்ளலே!
ஏழைக்குடி வாசனே
இரங்கி யாருள் நேசனே!

செய்யுந் தொழில் யாவுமே 
சீர்மிகச் செய்வோனே.
வேண்டி யுன்னைத் தொடங்கினேன்
விளங்கச் செய் ஐங்கரனே!
நாயகற்கு  நாயகனே !
நலஞ் செய் விநாயகனே! 
தாயகனே வந்தருள்வாய் 
சேமம் நீ தந்தருள்வாய்.

உனைத்த் தொழப் போதுமே
அனைத் தருளும் கிட்டுமே.
அன்னை முதல் ஐயன் தந்த
அருளாசி கொட்டுமே.
குணமதிக் கோமானே
தினமுன்னைத் தொழுவேனே.
கணங்களின் பதியோனே.
கணபதியே அருள் செய்வீர்.

ஈசனின் மைந்தா உன்னை 
பூசித்தேன் நன்மையே!
வாசலில் நீ அமர்ந்தால், 
நாசங்கள் நாடாதே!
தோசமெனும் தொல்லைகள்
தோற்றோடும் எல்லைகள். 
வாசஞ் செய் வல்லோனே
நேச நெஞ்சன் இல்லோனே.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.




No comments:

Post a Comment