தொழுவது கடனே!
இறந்தும் கடந்தவன்
இறைவன் ஆகிறான்.
ஆண்டும் கடந்தவன்
ஆண்டவன் ஆகிறான்.
துறந்தும் கடந்தவன்
தெய்வம் ஆகிறான்.
பாவம் கடந்தவன்
பகவான் ஆகிறான்.
பறந்தும் கடக்குமுன்
பாந்தவன் ஆகலாம்.
கரந்தும் கடந்த பின்
கடவுளும் ஆகலாம்.
புறந்தும் கடந்தானை
புவியினிற் தேடாமல்
மறந்தும் கடந்தானை
மனதினிற் தேடுவோம்.
கடந்தும் கடந்தவர்.
கடமையிற் படர்ந்தவர்.
நடந்தும் நடந்தவர்
நன்மையே தொடர்ந்தவர்
அறிந்தும் அறிந்தவர்
அருமைகள் புரிந்தவர்
தெரிந்தும் தெரிந்தவர்
தெய்வநிலை செறிந்தவர்.
மன்னுலகு உய்யவே!
மனிதநிலை செய்யவே!
எண்ணிய எய்யவே!
திண்ணிலைத் துய்யவே!
பண்ணிய மாந்தரெலாம்
பின்னவர்க்குக் கடவுளாம்.
நண்ணிடும் நலமெல்லாம்
அன்னவரின் அருட்களாம்.
கடவுட்கள் எத்தனை?
கணக்கில்லை அத்தனை!
இடமது இதயங்கள்
ஏற்றிடும் தெய்வங்கள்.
கடந்த நற் கருணைகள்
கிடந்தவர் உட் பெருக
தடமான ஆலயங்கள்
கடனாகத் தொழுவுங்கள்.
அம்மையும் அப்பனும்
நாம் காணுந் தெய்வமாம்.
செம்மையாம் சேவையும்
உண்மையாய்ச் செய்திடுவோம்.
நன்றியை மறந்தாரும்
நாயினுங் கேவலமாம்.
பாவமாம் பிறவிக்கடல்
போதும் மீண்டும்
வேண்டாம் வேண்டாம்.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment